வெள்ளி, 1 மே, 2015

உழைப்பவர் போற்றும் மே தினம்!

 


இன்று  மே தினம்.  உலகத் தொழிலாளர்கள் கொண்டாடி மகிழ்கின்ற நாள்.  இப்போது கடைப்பிடிக்கப் படுகின்ற 8 மணி நேர வேலை, வார விடுமுறை போன்ற தொழிலாளர் உரிமைகளை நாம் எப்படி பெற்றோம்? இதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வோம்.


நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட காலம் அது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நடந்த இக்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு நாடுகளிலும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன.  இதில் குறிப்பிட வேண்டியது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் ஆகும்.  ஆறு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது சாசன இயக்கம். 10 மணி நேர வேலை கோரிக்கை என்பது அதில் முக்கியமான ஒன்று.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தொழில்துறை வேகம் பிடித்தது. நவீன உலகம் என்றழைக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அப்போதுதான் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை அவர்களை வேலை வாங்கினர். இதற்கு எதிராக இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட சாசன இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் அந்தக் காலக்கட்டத்தில் பல நாடுகளுக்கும் பரவியது.
ஆஸ்திரேலியாவில் கட்டுமான தொழிலாளர்கள்தான் 8 மணி நேர வேலை கோரிக்கையை வலியுறுத்தி முதன் முதலாக 1856ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக இது அமைந்தது. ரஷ்யாவில் சார் மன்னரின் ஆட்சியில் 8 மணி நேர வேலை நேரத்தை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது. . அமெரிக்காவில் தொடங்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது.


1886 மே மாதம் 3 ஆம் தேதி, சிகாகோவில் மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கண்டன கூட்டம் நடத்திய போது கலவரம் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில்  4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து நடைபெற்ற கண்டன கூட்டத்திலும் கலவரம் உருவாகி,  காவலர் ஒருவர் இறந்தார். இதற்கு காரணமானவர்கள் என தொழிலாளர் தலைவர்கள் 4 பேர்  மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நால்வரும்  1887ம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
1890ம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒன்று கூடி,  சிகாகோ சம்பவத்தை கண்டித்ததோடு, 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், 1890ம் ஆண்டு மே முதல் தேதியில் அனைத்துலக தொழிலாளர் இயக்கங்களை நடத்தவும் தீர்மானங்களை நிறைவேற்றியது.  உலகத் தொழிலாளர்களுக்கு விடப்பட்ட இந்த அறைகூவலைத் தொடர்ந்துதான்,    மே 1-ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
இவ் வரலாற்றுப் பின்னணியைத் தொடர்ந்து, மே தின பதிவாக இன்னொரு   விஷயத்தையும் அறிந்து கொண்டு உள்ளத்தில் உறுதி ஏற்போம்!


இந்தியாவில் சென்னையில்தான் தொழிலாளர் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.  பொதுவுடை மைவாதியான ம.சிங்காரவேலர்தான் 1923-ல் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

இதே சென்னை கடற்கரையில்தான் உழைப்பாளர் சிலை இருக்கிறது. காலத்தால் அழியாத இச்சிலையை வடித்தவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி. நான்கு தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தித் தள்ளுவது போன்று அமைக்கப்பட்ட  இந்தச் சிலை உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகிறது.


உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் என அத்தனையையும் இம்மி பிசகாமல் வெளிப்படுத்தும் சிலை இது. சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய கடமையை (உழைப்பை) உருவகப்படுத்தும் விதத்தில் இச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. நமக்குள் இருக்க வேண்டிய மன வலிமையையும் ஒற்றுமையயும் வலியுறுத்துகின்ற அம்சமே இந்த உழைப்பாளர் சிலை.
மே தினம்..! உழைப்பவர் சீதனம்..!
உழைப்பே உயர்வு..!

THANKS TO NAKEERAN.